மும்பையில் ஜுமாட்டோ ஊழியர் கத்தியால் குத்திக் கொலை
மும்பை போவாய் நகரில் பழ விற்பனையாளருடன் ஏற்பட்ட தகராற்றில் ஜுமாட்டோ
மும்பை போவாய் நகரில் பழ விற்பனையாளருடன் ஏற்பட்ட தகராற்றில் ஜுமாட்டோ ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் தினேஷ் சிங்(20) மற்றும் அவருடைய நண்பர் ஜிதேந்திர ஹரிராம்(32), இருவரும் இணைந்து போவாய் நகரில் பழம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஜுமாட்டோவில் ஊழியராக பணியாற்றி வருபவர் அமோல் பாஸ்கர் சூரத்கர் (30). இந்நிலையில், உணவு எடுக்கும் உணவகத்தின் வெளியே பழ விற்பனை செய்யும் தள்ளு வண்டியை வைத்துள்ளார் சிங். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சச்சின் தினேஷ் சிங், சூரத்கரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதயம் மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தி குத்து ஏற்பட்ட நிலையில் இவரை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், சூரத்கர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சூரத் இறந்த தகவலைக் கேட்டு சிங் தனது சொந்த ஊரான உத்திரப் பிரதேசத்திற்கு தப்பியோட ரயில் ஏற முயன்றுள்ளார். அதற்குள் குர்லா ரயில் நிலையத்தில் போலீசார் அவனைக் கைது செய்தனர். பின்னர் அவனது நண்பர் ஜிதேந்திரனையும் கைது செய்தனர். கொலைக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சூரத்கர் போவையில் இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர். இவர் ஆன்லைன் உணவு விநியோக பயன்பாடான ஜுமாட்டோவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கும் சிங்கிற்கும் அடிக்கடி அந்த பகுதியில் தள்ளுவண்டி வைப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.