கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்..! சாதனைக்குமேல் சாதனை!
கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து...
ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஞாயிற்றுக்கிழமை இரவு வென்றது. இந்தப் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
டாஸ் வென்ற மும்பை பந்துவீச, கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வான்கடே திடலில் கேகேஆர் அணி 220/4 ரன்கள் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதனை கேகேஆர் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக இலக்கை 224/4 அடைந்தது. போட்டிக்குப் பிறகு மும்பை அணி கேகேஆரின் பதிவினைப் பகிர்ந்து அதன் பாணியிலேயே பதிலளித்திருக்கிறது.
அந்தப் பதிவில், ”சாதனை எச்சரிக்கை: ஐபிஎல் வரலாற்றில் எங்களது அதிகபட்ச சேஸிங்கை நிறைவு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை ரோஹித் சர்மா - ரிக்கல்டன் (148 ரன்கள்) நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்கள். இதற்கு முன்பாக, 2012ல் டிவைன் ஸ்மித் - சச்சின் இணைந்து 163 ரன்கள் எடுத்திருந்தார்கள்.