இந்திய தொழில்துறையினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
இந்திய தொழிலதிபர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
புது தில்லி: இந்திய தொழிலதிபர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றி வருகிறார். இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தில்லியில் தொழிலதிபர்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் அரசையே தொழில்துறையினர் எதிர்பார்க்கக் கூடாது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழில்துறையினர் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது எங்களுக்குப் பெருமை. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாக போராடி வருகிறது. கூடிய விரைவில் கரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். கரோனா வைரஸுக்கு எதிராக சீனா சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்கள் மிகச் சிறந்த திட்டங்களாகும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதே எனது முக்கிய நோக்கம். நான் மீண்டும் அதிபரானால், அமெரிக்கப் பங்குச் சந்தை வளர்ச்சி அடையும் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.