அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை
மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பு வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பு வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் சுக்லா (49), லால்பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை நேரத்துடன் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுக்லா, வழக்கம்போல் பாடம் நடத்துவது உள்பட தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். பள்ளி நேரம் முடிந்த பின்னர் அலுவலக அறைக்குச் சென்ற தனது செல்ஃபோனை வைத்துள்ளார். இதனிடையே மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், வகுப்பறைக்குச் சென்ற ஆசிரியர் சுக்லா, வகுப்பறைக்கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது நடவடிக்கைகளை இதர ஆசிரியர்களும் கவனிக்கத் தவறியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, ஆசிரியர் சுக்லா வகுப்பறை மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதை கவனித்த பள்ளியின் வாட்ச்மேன், உடனடியாக பள்ளியின் நிர்வாக அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சுக்லா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், சில காலமாக தனக்கு தீராத வயிற்று வலி இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டதாக சக ஆசிரியர்கள் கூறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் ஆசிரியர் சுக்லா உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.