கோடைக்காலம் எப்படி இருக்கப் போகிறது? எச்சரிக்கிறது இந்திய வானிலை மையம்
இந்தியாவில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் மே வரை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கமான அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலை அல்லது சராசரியான வெப்பநிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகியவை வடமேற்கு மாநிலங்களாகும்.
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகியவை மத்திய இந்தியாவைச் சேர்ந்தவை. குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை மேற்கு இந்தியப் பகுதிகளில் அடங்கும்.
தில்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள், சட்டீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம், சௌராஷ்டிரம், குஜராத்தின் கட்ச் பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம், விதர்பா, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் பகுதிகள், கேரளம் ஆகியவற்றில் வழக்கமான வெப்பநிலையை விட பகல் நேரத்தில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்து காணப்படும்.
இந்த பகுதிகளைத் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலையே நீடிக்கும். அதில் -0.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலை மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.