முகப்பு
இந்தியா

வைரலான பிங்க் நிற யானை புகைப்படம்! விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு!

சமூக வலைதளங்களில் வைரலான பிங்க் நிற யானை புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Updated On : 30 மார்ச், 2026 at 8:37 AM
பிங்க் நிற யானை - Instagram
பகிர்:

ஜெய்ப்பூரில் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் நடத்திய பிங்க் நிற யானை ஃபோட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த பயண புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா. இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடத்திய ’பிங்க் நிற யானை’ ஃபோட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த யானை கடந்த மாதம் உயிரிழந்ததால் விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் 6 வாரங்கள் தங்கியிருந்த போது அந்நகரின் பிங்க் நிற அடையாளம் இந்த ஃபோட்டோஷூட் நடத்துவதற்கு உந்துதலாக இருந்ததாக ஜூலியா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து யஷஸ்வி என்னும் மாடலுடன் யானைக்கு பிங்க் நிற வண்ணம் பூசி பாரம்பரிய பின்னணியில் புகைப்படங்களை எடுத்ததாகவும் ராஜஸ்தானின் முக்கியச் சின்னமாக உள்ள யானைகள் இந்தப் புகைப்படங்களில் மிக முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் வைரலான நிலையில் யானைக்கு வண்ணம் பூசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அழகியல் காரணங்களுக்காக விலங்குகளைப் பயன்படுத்துவது அறமற்றது என்றும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த புகைப்படக் கலைஞர் புருலேவா, யானையின் மீது பயன்படுத்தப்பட்ட வண்ணம் இயற்கையானது என்றும் திருவிழாக்களில் யானைகளின் மீது பயன்படுத்தப்படும் வண்ணத்தையே தாங்களும் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், இதற்கென யானைகள் முகாமுக்கு பலமுறை சென்று அதற்கான அனுமதி பெற்றே இதனைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றி யானையின் உரிமையாளரான ஷாதிக் கான் கூறுகையில், ”சாச்சல் எனப்படும் இந்த யானையின் வயது 65. சவாரிக்கு இந்த யானை பயன்படுத்தப்படவில்லை” என்றார். மேலும், புகைப்படம் எடுக்க 10 நிமிடங்கள் மட்டுமே வண்ணம் பூசப்பட்டதாகவும் அதன் பின்னர் உடனடியாக அதனை கழுவியதாகவும் குறிப்பிட்ட அவர், சாச்சல் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். ஆனால், எந்த பாதிப்பும் அதற்கு ஏற்படவில்லை என்றும் கூறினார்.

வனத்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கென அனுமதி பெறப்பட்டதா என்றும் விலங்குகள் நல விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விலங்குகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

summary

Pink elephant photoshoot in Jaipur sparks row, probe ordered over animal welfare concerns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.