நான் உங்கள் மகனா அல்லது பயங்கரவாதியா? தில்லி மக்களிடம் கேஜரிவால் கேள்வி
என்னை உங்கள் மகனாகப் பார்க்கிறீர்களா அல்லது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களா என்பதை தில்லி மக்களே முடிவு செய்யட்டும் என்று புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
புது தில்லி: என்னை உங்கள் மகனாகப் பார்க்கிறீர்களா அல்லது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களா என்பதை தில்லி மக்களே முடிவு செய்யட்டும் என்று புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்று பாஜக தலைவர்கள் கூறியிருந்த நிலையில், தில்லி முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், தில்லி மக்கள் அனைவரும், என்னை அவர்களது மகனாகப் பார்க்கிறார்களா? ஒரு சகோதரனாகப் பார்க்கிறார்களா? அல்லது பயங்கரவாதியாகப் பார்க்கிறார்களா என்பது குறித்த முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நான் எனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு முறை நான் இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்து, அவர் 3 - 4 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே, உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த நிலையில்தான் நான் நாட்டில் ஊழலை ஒழிக்க இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டம் இருந்தேன். ஒரு முறை 15 நாட்களும், இரண்டாவதுமுறை 10 நாட்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன் என்று பேசியுள்ளார்.