காவலர்களுக்கு கரோனா தொற்று: பெங்களூருவில் 20 காவல் நிலையங்கள் மூடல்!
காவலர்களிடையே அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக பெங்களூருவில் 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பெங்களூரு: காவலர்களிடையே அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக பெங்களூருவில் 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில வாரங்களாக நகரில் காவலர்கள் மத்தியில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து, நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எங்கெல்லாம் கரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளதோ, அந்த காவல் நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. அங்கே கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காக்கவும்தான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் தங்களது புகார்களை பதிவு செய்தல் மற்றும் இதர உதவிகளை பெறலாம்.
போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ள்ளிடோருக்கு பாதுகாப்புக் கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் கைச்சுதத திரவம் உள்ளிட்டவை காவல்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கமர்சியல் தெரு, காட்டன்பெட் மற்றும் சிக்கன்பெட் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில்தான் காவல் நிலையங்கள் பெங்களூருவில் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.