ஐஐடி-கான்பூர் வளாகத்தில் உதவிப் பேராசிரியர் தற்கொலை
ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பிரமோத் சுப்ரமணியம், கல்வி நிலைய வளாகத்திலேயே புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
லக்னௌ: ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பிரமோத் சுப்ரமணியம், கல்வி நிலைய வளாகத்திலேயே புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 33 வயது நபரான பிரமோத் சுப்ரமணியம், ஐஐடி வளாகத்திலேயே தூக்கிட்டு தறகொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கலியான்புர் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
இது குறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் பேராசிரியர் அபே கரந்திகர் இது பற்றி தெரிவிக்கையில், ஐஐடி வளாகத்தில் பேராசிரியர் பிரமோத் சுப்ரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்து மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் வளரும் நட்சத்திரமாக இருந்த ஒரு இளம் பேராசிரியரை இழந்து விட்டோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நைலான் கயிறு கொண்டு பிரமோத் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.
கரோனா தொற்று காரணமாக ஐஐடி- கான்பூர் கல்வி நிலையம் மூடப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் வசித்து வந்தவர்கள் மட்டுமே தற்போது அங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.