தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்துக் கொன்ற மீட்டர் மேனுக்கு மரண தண்டனை
மேற்கு வங்கத்தில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி கமாருஸம்மான் சர்க்காருக்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி கமாருஸம்மான் சர்க்காருக்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து சைக்கிள் செயினால் கழுத்தை நெறித்துக் கொன்று, பணம், நகைகளைக் கொள்ளையடித்த வழக்கை விசாரித்து வந்த கல்னா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தமன் குமார் மண்டல், குற்றவாளி சர்க்காருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பர்தமான் மாவட்டம் புர்பா பகுதயைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஒருவரைக் கொலை செய்த வழக்கில் சர்க்காரைக் கைது செய்த போதுதான், அது ஒன்று மட்டுமே அவன் செய்த கொலைக் குற்றம் அல்ல என்பதும், அவன் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அவர் கொன்ற 15 பெண்களில், 16 - 75 வயதுடையவர்களாக இருந்துள்ளனர். 2013 - 2019ஆம் ஆண்டு வரை இந்த குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் சர்க்கார், அதில் 7 பேரை கொலை செய்துள்ளான். அதில் ஒரு பெண்ணின் உடல் மிக மோசமாக சிதைக்கப்பட்டிருந்ததும், பலாத்காரம் செய்து, கடுமையாக பெண்ணை தாக்கியிருந்ததும் உடற்கூறாய்வில் தெரிய வந்தது.
மதிய வேளையில், டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு வீட்டில் மின்சாரத்தை கணக்கெடுப்பவர் போல சென்று அங்கிருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு, கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
அதனால் இவனை மீட்டர் மேன் என்று அடையாளம் கூறப்பட்டது. இவன் மீது இரண்டு பலாத்கார வழக்குகள், ஏழு கொலை மற்றும் 6 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாருமற்ற பெண்களை குறி வைத்துத் தாக்கி, அவர்களை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தீர்ப்பை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சர்க்காரின் வழக்குரைஞர் கூறியுள்ளார்.