கேரள தங்கக் கடத்தல்: குற்றவாளி ஸ்வப்னாவின் ஜாமீன் மனு ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் இவ்வழக்கை பராமரிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், என்ஐஏ சட்டப் பிரிவு 21 ன் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பு இவ்வழக்கை விசாரிக்கும் நிலையில், குற்றவாளியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், இது சிறப்பு நீதிமன்றத்தால் மட்டுமே பரிசீலிக்கப்பட முடியும் என்றும் மத்திய அரசு ஆலோசகர் ரவி பிரகாஷ் கூறினார்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 14-க்கு ஒத்திவைத்தது. மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) நகலை, குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞருக்கு வழங்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை எடுத்துக் கொண்டதுடன் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.