கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீர் நாயரை என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் வைத்து சனிக்கிழமை கைது செய்தனர். இதன்பிறகு, அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை கேரளம் அழைத்து வரப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கொச்சியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விவரம்:
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கக் கடத்தல் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, தலைமறைவானவர்களை என்ஐஏ தேடி வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த சந்தீப் நாயருடன் பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கேரளம் அழைத்து வந்தனர்.