அடிபம்பு நிறுவக் கோரி மனு கொடுத்த விவசாயிக்கு நேர்ந்த அவமானம்!
மத்திய பிரதேசத்தில் அடிபம்பு நிறுவக் கோரி மனு கொடுத்த விவசாயிக்கு நேர்ந்த அவமானம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பின்ட்: மத்திய பிரதேசத்தில் அடிபம்பு நிறுவக் கோரி மனு கொடுத்த விவசாயிக்கு நேர்ந்த அவமானம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய பிரதேசம் பின்ட் மாவட்டம் ரஹாவளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் தீக்சித். இவர் எட்டு மாதங்களுக்கு முன்னதாக தனது வீட்டிற்கு அருகே அடிபம்பு நிறுவக் கோரி மாநில பொது சுகாதார பொறியியல் துறையில் மனு கொடுத்துள்ளார். அதற்கான பணிகள் துவங்கிய நிலையில் முழுமையடையாமல் பணியாளர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
எனவே கடந்த மாதம் 7-ஆம் தேதியன்று அவர் மற்றொரு புகார் மனுவினை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒருமாதம் கடந்த நிலையில் ஜூலை 9-ஆம் தேதியன்று அவருக்கு வந்த பதிலானது அவரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
ராகுலுக்கு வந்த பதிலில், ‘இந்த புகாரினை அளித்துள்ளவர் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார்; அவரை வலிப்பு நோயும் தாக்குகிறது. அங்குள்ள அடி பம்பு வேலை செய்கிறது. ஆனால் இவரது மூளைதான் வேலை செய்யவில்லை. இது ஒட்டுமொத்த பொது சுகாதார பொறியியல் துறைக்கும் தெரியும். இப்போது சீனாவின் கொரில்லா போர் முறையில் பதிலடி தரும் நேரம். அங்குள்ள அடிபம்பை பிடுங்கி புகார் கொடுத்தவரின் நெஞ்சில் நட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மன வேதனையடைந்த ராகுல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கவனதிற்கு இதைக் கொண்டு சென்ற பின்னர், அத்துறையின் செயற் பொறியாளரான கோயல், ’இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்துவோம். மாவட்ட ஆட்சித் தலைவரான வீரேந்திர ராவத்திடமும் பேசியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
துறையின் இணையதளத்தில் இருந்து அந்த பதில் நீக்கப்பட்ட அதேசமயம் ராகுல் வீட்டில் அடிபம்பு அமைக்கும் பணிகள் உடனடியாகத் துவங்கியுள்ளன.