இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
தொடர்ந்து இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தன.
இந்நிலையில், இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.
எதிர்கட்சித் தரப்பில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சிவசேனையின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.