புதுவையில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வரை 366 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 218 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 8 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் புதிதாக புதுச்சேரியில் 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றியவர் ஆவர். இதில் 11 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 6 பேர் ஜிப்மரிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிகிச்சையிலிருந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்யுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 383 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 226 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுவையில் முகக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே முகக்கவசத்தை தயாரிக்கும் நிறுவனத்தால் இதுவரை 40 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களால் இன்னும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம். எனவே, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.