ஐதராபாத்தில் 31 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானாவின் ஷம்ஷாபாத் நகரில் வசித்து வரும் விமானி வெங்கடேஷ்ரவர் ராவ்வின் மனைவி லாவண்யா(31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், வெங்கடேஷ்வர் ராவுக்கும் 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது வரை இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.
இதனால் லாவண்யாவை அவரது கணவர் தொடர்ந்து திட்டி அவமரியாதை செய்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த லாவண்யா, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி கடந்த வியாழன் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லாவண்யாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். குழந்தை இல்லாத காரணத்தால் கணவரும் அவரது குடும்பத்தினரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதே தற்கொலைக்கு காரணம் என லவண்யா குறிப்பிட்டுள்ளார். உடனே இதுதொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வர் ராவை காவல்துறையினர் கைது செய்தனர்.