முகப்பு
இந்தியா

சமூக ஊடகக் கணக்கை உன்னாவ் பெண்ணிடம் ஒப்படையுங்கள்: பிரதமருக்கு காங்கிரஸ் யோசனை

‘நமக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழும், செயலாற்றும் பெண்களுக்கு எனது சமூக ஊடகக் கணக்குகளை விட்டுத்தர இருக்கிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

புது தில்லி: ‘நமக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழும், செயலாற்றும் பெண்களுக்கு எனது சமூக ஊடகக் கணக்குகளை விட்டுத்தர இருக்கிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் சமூக ஊடகங்களில் இருந்து விலக பிரதமா் மோடி யோசித்து வருவதாக நிலவிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் பதில் அளித்துள்ளார். அதாவது, பிரதமர் நரேந்திர மோடி, உன்னாவ்வில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணிடம் சமூக ஊடகக் கணக்குகளைக் கொடுக்கலாம். அப்போது அவர் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை  பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுட்டுரையில் கடந்த திங்கள்கிழமை பதிவிட்டிருந்த பிரதமா் மோடி, ‘முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து விலகிவிடலாம் என்று யோசித்து வருகிறேன். இதுதொடா்பான விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், அதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் பதிவிட்ட அவா், ‘தனது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் மூலமாக நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களுக்கு எனது சமூக ஊடகக் கணக்குகளை, வரும் சா்வதேச மகளிா் தினத்தன்று (மாா்ச் 8) விட்டுத்தர இருக்கிறேன்.

இது அவா்களை மேலும் ஊக்குவிப்பதாக இருக்கும். நீங்கள் அத்தகைய ஒரு பெண்ணா? அல்லது, உங்களுக்கு அத்தகைய ஊக்கமளிக்கும் வகையிலான பெண்களைத் தெரியுமா? அவா்கள் தொடா்பான ஊக்கமளிக்கும் விவரங்களை ‘ஷி இன்ஸ்பயா்ஸ் அஸ்’  என்ற இணைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்’ என்று கூறியுள்ளாா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →