தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட ராகுல் திட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு தில்லியில் கடந்த வார தொடக்கத்தில் நிகழ்ந்த வன்முறை காரணமாக 47 பேர் வரை உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறை நிகழ்ந்தபோது காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த தில்லி குற்றப்பிரிவு காவல் துறை கீழ் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வன்முறை காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து அமித் ஷாவை பதவி நீக்கக்கோரி மனு அளித்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்விலும் காங்கிரஸ் இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கான நேரம் மற்றும் தேதி குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிடவுள்ளார் எனத் தெரிகிறது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகதத்தில் இன்று (புதன்கிழமை) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "மக்களவையில் தில்லி வன்முறை குறித்து விவாதிக்கக்கோரி மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.