ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது.
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
சமீபத்தில் அவர் சௌதி அரேபியாவுக்குச் சென்று வந்த, கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை 62 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கர்நாடகத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.