தனியார் துறையினர் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: கேஜரிவால் அறிவுறுத்தல்
கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, தில்லியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இயன்றவரை வீட்டியிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்..
கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, தில்லியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இயன்றவரை வீட்டியிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவில் படையெடுத்து 175 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், தில்லியில் அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்பட அனைத்தும் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அந்த நாட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முக்கியமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை நிலவரப்படி தலைநகர் தில்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 195 பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.