ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட அவலம்
உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 987 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பலரும் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்தே ஊர் திரும்பி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
Advertisement
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.
தில்லி மற்றும் நொய்டாவிலிருந்து உ.பி திரும்பிய தொழிலாளர்கள் ரே பரேலி மாவட்டத்தை அடைந்தவுடன் அங்கிருந்த பஸ் நிலையத்தில் அதிகாரிகளால் அமர வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் வரும் என்றும், அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களும் அங்கேயே அமர்ந்து காத்திருந்தனர்.
அப்போது பாதுகாப்புக் கவச உடை அணிந்த ஊழியர்கள் இருவர் வந்து அவர்கள் மீது நீர்க்கரைசல் ஒன்றைத் தெளித்துள்ளனர். இதனை எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக் அங்கிருந்த குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உண்டானதுடன், சிலருக்கு தோலில் தடிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர்கள் அங்கிருந்து கிளம்பி தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்று விடலாம் என்று முடிவெடுத்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது தெளிக்கப்பட்டது சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் என்பதும், அது துணிகளை வெளுக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினி என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.