ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி
ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு புதனன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக்ரா: ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு புதனன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 74,292 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2,415 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு புதனன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில சிறைத்துறை டிஜிபி ஆனந்த் குமார் கூறியுள்ளதாவது:
ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் கடந்த 6-ஆம் தேதியன்று சிறைக்கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 10 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தங்கயிருந்த பகுதிகளில் உள்ள சுமார் 100 கைதிகளுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,664 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 82 பேர் மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.