விமானப் பயணத்தின் போது பயணிகளும், விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, விமான நிலையங்களுக்கு பயணிகள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதியை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
விமான நிலையத்துக்கு வரும் அல்லது விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை நாடாமல் அவரவர் ஏற்பாட்டின் பேரில் டேக்ஸி போன்ற வாகனங்களை அதற்குரிய கட்டுப்பாட்டின் பேரில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே பயணிகள் விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.
விமானப் பயணிகள் அனைவரும் தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது கட்டாயமல்ல. ஆரோக்கிய சேது செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் உரிய மருத்துவப் பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.