புது தில்லி: புயலால் உயிரிழப்புகளையும் கடும் சேதங்களையும் சந்தித்திருக்கும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், புயலால் சேதமடைந்த அனைத்தையும் மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டு புனரமைத்துக் கொடுக்கும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசமான நேரத்தில் புயலை மிக தைரியத்தோடு எதிர்கொண்ட ஒடிசா மாநில மக்களின் பேரில் நினைவு செல்கிறது.
இவ்விரண்டு மாநிலங்களிலும் இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வருவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகள் மாநிலத்தின் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலியாகியிருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், இதுபோன்றதொரு பேரிடரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து, தற்போதிருக்கும் நிலைமையை, சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பயிர்கள், குடிசைகள், பாலங்கள் என ஒன்றுவிடாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும் மம்தா கூறியிருந்தார்.
ஒடிசாவில் புயல் பாதிப்பினால் சுமார் 44.8 லட்சர் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘உம்பன் புயல்’ புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.