தோல்வியில் முடிந்ததா ஊரடங்கு? ராகுல் விமரிசனத்துக்கு பிரகாஷ் ஜாவடேகர் பதிலடி
ஊரடங்கு தோல்வியில் முடிந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வைத்த விமரிசனத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளித்துள்ளார்.
ஊரடங்கு தோல்வியில் முடிந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வைத்த விமரிசனத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:
"நாங்கள் ஊரடங்கை அமல்படுத்தியபோது, காங்கிரஸ் எங்களை விமரிசித்தது. தற்போது நாங்கள் அதைத் தளர்த்துகிறோம். அவர்கள் எங்களை மீண்டும் விமரிசிக்கிறார்கள். ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைந்த அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது. அவர்கள் அரசியல் விளையாட்டைத்தான் விளையாடுவார்கள். நாட்டு மக்களுடன் துணை நிற்க வேண்டிய நேரத்தில்தான், அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.
45 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல 3,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம். எங்களது மாநில அரசுகள், அது உத்தரப் பிரதேசமாகட்டும், கர்நாடகமாகட்டும். அவர்கள் ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளனர். எந்த காங்கிரஸ் ஆளும் மாநில அரசு இதைச் செய்துள்ளது?
ரூ.7,500 தொகுப்பு திட்டத்தைத்தான் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 80 கோடி மக்களுக்கு நம்மிடம் உணவுப் பொருள்கள் உள்ளன. 10 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் அட்டை இல்லாமலே 10 கிலோ எடைக்கு தானியங்களையும், 2 கிலோ எடைக்கு பருப்புகளையும் வாங்கிக் கொள்ளலாம். பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. சுமார், 9 கோடி விவசாயிகள் ரூ. 2 ஆயிரம் பெற்றுள்ளனர். 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தலா ரூ. 1,000 பெற்றுள்ளனர். இணையதள வாயிலாக பொருள்களை விற்பனை செய்வர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான திட்டத்தை வகுத்து வருகிறோம்".