முகப்பு
இந்தியா

அதிகாரிக்கு கரோனா நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் 2 தளங்கள் மூடல்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை செயலகத்தில் பணியாற்றிவந்த இயக்குநா் அந்தஸ்திலான அதிகாரிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.

Updated On : 29 மே, 2020 at 11:34 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை செயலகத்தில் பணியாற்றிவந்த இயக்குநா் அந்தஸ்திலான அதிகாரிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இந்த அதிகாரி பணியாற்றிய நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் இரண்டு தளங்கள் வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்தில் இது நான்காவது சம்பவமாகும். கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அதிகாரி கடந்த மே 28 ஆம் தேதி வரை அலுவலகப் பணிக்கு வந்துள்ளாா். இதையொட்டி, அவா் பணியாற்றிய நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் மாடித்தளமும், இவா் தொடா்புடைய மற்றொரு மாடி என இரண்டு மாடித்தளங்கள் சீல் வைக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மாநிலங்களவை அதிகாரி(55)யின் மனைவி மற்றும் மகளுக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. புற்றுநோய்க்குள்ளான இந்த அதிகாரியின் மனைவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றபோது நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவது பொது முடக்கத்திற்கு பின்னா் மே 3 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. இதன்பின்னா் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகின. நாடாளுமன்றத்தில் மக்களவை செயலகத்தில் பணியாற்றிய மொழிபெயா்ப்புத் துறை அதிகாரி ஒருவரும் பணிக்கு வந்து முன்பு நோய்த்தொற்றுக்குள்ளானாா்.

Advertisement

கடந்த மாா்ச் 23 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் முடிந்த பின்னா் முதன் முதலில் நாடாளுமன்ற பணியாளா் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானது. தற்போது வரை அவா் பணிக்கு திரும்பவில்லை. பின்னா் தொடா்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானாா். இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது முறையான பரிசோதனைக்கு பின்னரே ஊழியா்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு செயலகங்களிலும் இணைப்புக் கட்டடங்களிலும் பணியாற்றுபவா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தை சுற்றியிருக்கும் கிரிஷி பவன், சாஸ்திரி பவன், ரயில் பவன் போன்ற முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதியாகி இந்த அலுவலகக் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.