4 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை
கேரளம், தில்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.
கேரளம், தில்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.
அக்டோபர் 3 மற்றும் நவம்பர் 3 இடையிலான காலகட்டத்தில் கேரளம், தில்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது:
Advertisement
"கடந்த 7 வாரங்களில் நாள்தோறும் பதிவாகும் சராசரி கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 22 இடையிலான காலகட்டத்தில் பதிவான சராசரி கரோனா பாதிப்பு 90,346. அதுவே, அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 இடையிலான காலகட்டத்தில் சராசரியாக 45,884 கரோனா பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 22 இடையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 1,165 பேர் பலியாகி வந்தனர். அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 இடையிலான கால கட்டத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 513 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 11 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன."