ஈரான் உடன் அமைதிப்பேச்சு! பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸுக்கு இஸ்லாமாபாதில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இத்துடன், ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப். 7 அன்று அறிவித்தார். மேலும், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மற்றும் ஈரானின் அரசுகள் ஒப்புதல் வழங்கின.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுவினர் சனிக்கிழமை (ஏப். 11) அன்று இஸ்லாமாபாத் வந்தடைந்தனர்.
இதையடுத்து, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஜே.டி. வான்ஸ் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
முன்னதாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஈரான் குழுவினருக்கு “மினாப் 168” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானின் மினாப் நகர பள்ளிக் கூடத்தின் மீதான அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
US VP J.D. Vance arrived in Pakistan to hold peace talks with Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.