பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்க சென்ற வைபவ் சூர்யவன்ஷி!
ஆட்ட நாயகன் விருது வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி பேசியது குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு, கேக் வெட்ட நேரமில்லை; தூங்க வேண்டும்” எனப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குவாஹாட்டியில் நேற்றிரவு மழையின் காரணமாக போட்டி தாமதமாக நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 201/8 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் 18 ஓவர்களில் 202/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் ஓவரில் தொடர்ச்சியாக 4,4,4,6 என அடித்து மிரள வைத்தார்.
Advertisement
ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷியிடம் கேக் வெட்டுவீர்களா? உங்களுக்கு ஹேசில்வுட், பும்ரா நினைத்தெல்லாம் பயமில்லையா எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலளித்து சூர்யவன்ஷி பேசியிருப்பதாவது:
இன்று கேக் வெட்ட மாட்டோம் சார். இன்று விரைவாக தூங்க வேண்டும்; ஏனெனில், காலையில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். காலையிலேயே விமானம் இருப்பதால், காலையில் கிளம்ப வேண்டியிருக்கிறது.
பயம் எல்லாம் இல்லை சார். நான் பயிற்சியில் என்ன செய்கிறேனோ அதைதான் போட்டியில் செய்கிறேன். எதையும் கூடுதலாக செய்வதில்லை. என் இயல்பான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.
பும்ரா, ஹேசில்வுட் பந்துவீசுகிறார்கள் என்பது என் மூளையில் இருக்கும். இருந்தாலுமே, என்ன பந்து வருகிறதோ அதற்குதான் நான் விளையாடுகிறேன்; பந்துவீச்சாளர்களைக் கவனிப்பதில்லை. இது தொடக்கம் மட்டுமே என்பதால் நான் எனது பயிற்சிகளிலும் தயாரிப்புகளிலும் கவனம் செலுத்துகிறேன் என்றார்.