'காற்று மாசுபாட்டால் தில்லியில் கரோனா அதிகரிக்கவில்லை'
தில்லியில் காற்று மாசுபாட்டால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் காற்று மாசுபாட்டால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இருப்பதாகவும் கூறினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் மூன்றாவது முறையாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் காற்று மாசுபாட்டால் தில்லியில் கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, ''மூன்றாவது முறையாக கரோனா தொற்று பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் 110 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்பட 500 கரோனா படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகித படுக்கைகளை ஐ.சி.யூ படுக்கைகளாக ஒதுக்குவதற்கான ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஐ.சி.யூ. படுக்கைகள் போதிய அளவில் உள்ளன. எனினும் சிலர் அரசு மருத்துவமனையை புறக்கணித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவதால் படுக்கைகளின் எண்ணிக்கையில் பிரச்னை ஏற்படுகிறது.
மேலும், காற்று மாசுபாட்டால் கரோனா தொற்று பரவவில்லை. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும், பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.