டேராடூன்: உத்தரகண்ட் அரசு சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற பாஜக ஆளும் பல மாநில அரசுகள் திட்டமிட்டு வரும் நிலையில், உத்தரகண்ட் அரசு இதனைத் தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து சாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பண ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
சாதி மறுப்பு திருமணத்தின் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு திருமண ஜோடியில் ஒருவர், பட்டியலினப் பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சாதி மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தேசிய ஒற்றுமையின் உணர்வை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும், இதற்கு தகுதியான ஜோடிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக நலத்துறை அதிகாரி தீபன்கர் தெரிவித்தார்.