மத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கென்று உருவாக்கப்பட்டுள்ள அமைச்சா்கள் குழுவின் முதல் கூட்டம், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாட்டிலேயே முதல் முறையாக, மத்திய பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்புக்கென்று அமைச்சா்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பசுக்கள் கொல்லப்படுவதை தடுப்பது, வயதான பசுக்களை இறுதி வரை சிறப்பாக பராமரிப்பது, பசு மற்றும் கன்றுகளின் நலன்களைக் காப்பது ஆகியவை இந்தக் குழுவின் முக்கியப் பணிகளாகும்.
இந்தக் குழுவில், மாநில கால்நடை பராமரிப்புத் துறை, வனத் துறை, உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, உள்துறை, விவசாயிகள் நலத் துறை ஆகியவற்றின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை காணொலி முறையில் நடைபெற்றது. முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் போபாலில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
ஸ்ரீகிருஷ்ணரையும் பசுக்களையும் வழிபடும் கோஷ்டாஷ்டமி தினத்தையொட்டி, முதல்வா் வாழ்த்து தெரிவித்தாா். மாநிலத்தில் பசுப் பாதுகாப்புக்காக தன்னாா்வலா்களுடன் இணைந்து 2,000 கோசாலைகள் அமைப்பது, அவற்றின் பராமரிப்புக்காக உபரி வரி விதிப்பது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.