முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் வன்முறையாக மாறிய பாஜக பேரணி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கொல்கத்தாவில் கலவரமாக மாறிய பாஜக பேரணி
பகிர்:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் கலவரம் ஏற்பட்டது. 

அனுமதியை மீறி பேரணி நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதில் பாஜக மாநிலத்துணைத்தலைவர் ராஜூ பானர்ஜி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். 


பாஜகவினர் தொடர்ந்து கொல்லப்படுவதை கண்டித்து கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மீறி பேரணி நடத்திய நிலையில், மேற்குவங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்தனர். 

டயர்களை தீயிட்டு எரித்த பாஜகவினரை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பாஜகவினர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அர்ஜுன் சிங், கைலாஷ் விஜயவர்ஜியா, லாக்கெட் சாட்டர்ஜி, முகுல் ராய் ஆகியோரும் இந்த பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கு மோசமடைகிறது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு இடங்களில் பாஜக சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி பேரணியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாஜகவினர் செயல்பட்டதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தடியடி நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி எங்களை விரட்டியடிக்கிறது என்று பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் குற்றம் சாட்டினார்.

கரோனா பெருந்தொற்று பரவி வருவதால், வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து நூற்றுக்கும் அதிகமாக கூடாமல், அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட வேண்டும் என்று மேற்குவங்க அரசு அறிவித்திருந்தது. 

மேலும் தூய்மைப் பணிகளுக்காக தலைமைச் செயலகம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவித்திருந்தது. 

இதேபோல் கொல்கத்தாவின் ஹாஸ்டிங்ஸ் பகுதியிலும் தடையை மீறி நடந்த பேரணியின்போது பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.

கொல்கத்தா மற்றும் ஹவுராவில் பேரணிக்கு திட்டமிடப்பட்டிருந்த சாலைகள் மூடப்பட்டிருந்தன. காவல்துறையினரின் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டதால், காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →