கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கின் காரணமாக கல்விநிலையங்கள் உள்பட வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் விருப்பப்படி திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அந்தவகையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திரையரங்கில் 50 விழுக்காடு ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவதாகவும், அவர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்குமிடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு அதில் மக்கள் வரிசையாக அனுப்பப்பட்டு வருகின்றனர். படம் முடிந்து வெளியேறும் வாயிலிலும் சமூக இடைவெளியைப் பயன்படுத்தி அனுப்பப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துர்கா பூஜையையொட்டி அடுத்தடுத்து அனைத்துவிதமான தளர்வுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.