முகப்பு
இந்தியா

1,72,000 ஆண்டுகளுக்கு முன்.. தார் பாலைவனத்தில் ஓடிய ஆறு

தார் பாலைவனத்துக்கு மத்தியில், பிகானீர் அருகே சுமார் 172 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆறு வளைந்து நெளிந்து சென்றிருப்பதற்கான சான்றுகள், ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
கோப்புப் படம்
பகிர்:


புது தில்லி: தார் பாலைவனத்துக்கு மத்தியில், பிகானீர் அருகே சுமார் 172 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆறு வளைந்து நெளிந்து சென்றிருப்பதற்கான சான்றுகள், ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

அதேவேளையில், அந்த ஆற்றின் கரையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இருந்துள்ளன.

குவாட்டநெரி அறிவியல் கருத்தாக்கங்களுக்கான இதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய தார் பாலைவனத்தில் ஒரு ஆறு இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும், ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் மையம், ஐஐஎஸ்இஆர் கொல்கத்தா மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், கற்காலத்தில், தார் பாலைவனத்தின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளில் ஏராளமான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

அதாவது 172 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் ஒரு ஆறு ஓடியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் அருகே அந்த ஆறு ஓடியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதாவது தற்போதிருக்கும் ஆற்றுப் பகுதிக்கு 200 கி.மீ. தொலைவில் அந்த ஆறு அமைந்திருக்கலாம்.

தார் பாலைவனத்தின் மத்தியப் பகுதியில் ஓடிய அந்த ஆறு, அப்பகுதியில் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக அமைந்திருந்ததையும், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு புலம்பெயர்ந்து வந்திருப்பதையும் உணர்த்துகிறது.

இதன் மூலம், கற்காலத்தில் இழந்த ஆறுகளின் முக்கியத்துவத்தை அப்போதைய மக்கள் உணராதிருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தார் பாலைவனம், மிகப்பழமையான வரலாறுகளைக் கொண்டிருக்கிறது. கற்கால மக்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்லாமல், இதுபோன்ற ஒருநிலையல்லாத நிலப்பரப்புகளை வாழ்வாதாரமாக மாற்றி வைத்திருந்தனர் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் இன்னமும் கண்டறியப்பட வேண்டியுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கைக் கோள் புகைப்படங்கள் வாயிலாக, தார் பாலைவனத்துக்கு இடையே அந்த ஆற்றின் விரிந்து பரந்த கிளைகள் பாய்ந்தோடியிருப்பதற்கான ஆதாரங்களையும் அறிய முடிந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், எங்கே ஆறுகள் பாய்ந்தோடின என்பதை அறிய முடியும், ஆனால், அவை எப்போது இருந்தன என்ற சரியான காலத்தை அறிய முடியாது என்பது கண்டறியப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலை பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அந்த நல் என்று குறிப்பிடப்படும் ஆறு சுமார் 172 முதல் 140 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாய்ந்தோடியிருக்கலாம், அப்போது, அப்பகுதியில் மழைக்காலம் தற்போதைய காலத்தை விட சற்று பலவீனமாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில், அப்பகுதியில் சுமார் 95 முதல் 78 ஆயிரம் ஆண்டுகள் வரை ஆறு பாய்ந்தோடியிருக்கலாம் என்றும் தெரிய வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments