அருணாசலில் 5 வேட்டைக்காரர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றதாகப் புகார்; விசாரணை தீவிரம்
அருணாசலப் பிரதேசம் மேல்சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்திச் சென்றதாக புகார் வந்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம் மேல்சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்திச் சென்றதாக புகார் வந்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று நாசோ பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அதே வேட்டைக் கும்பலைச் சேர்ந்த மேலும் 2 பேரும் அப்போது அவர்களுடன் இருந்ததாகவும், கடத்தல் சம்பவத்தின் போது சாமர்த்தியமாக இருவரும் தப்பி வந்து காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, காவல்துறை அதிகாரியை நாசோ காவல் நிலையத்துக்கு அனுப்பி, அப்பகுதியில் விசாரணை நடத்தி உண்மை நிலவரத்தை அறிந்து உடனடியாக தகவல் அளிக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர் தரு குஸ்ஸார் கூறியுள்ளார்.
சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் டாகின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐந்து பேரையும் பத்திரமாக மீட்கும்படி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மேற்கு பாசிகட் எம்எல்ஏ நிநோங் எரிங் குரல் எழுப்பியுள்ளார். வேட்டைக்காரர்களைக் கடத்திச் சென்றிருக்கும் சீன ராணுவத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.