சமையலறை என்றாலே ஸ்பெஷல்தான்! அதை பளபளவென வைக்க டிப்ஸ்!!
சமையலறை என்றாலே கூடுதல் ஸ்பெஷல்தாங்க, அதை பளபளவென வைக்க சில டிப்ஸ்
சுத்தமாக இருக்க வேண்டிய அறைகளில் மிக முக்கியமானது சமையலறைதான். ஆனால், அங்குதான் விரைவாக கறைகள் ஏற்படும். நாற்றம் வீசும், எனவே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.
சமையலறையில் அதிகம் ஏற்படும் எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்து பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்த்தால் கறை மறையும்.
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
பாத்திரத்தை துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பாஞ்சில் உள்ள ஈரப்பதத்தால் அதை சுத்தம் இல்லாமல் அடிக்கடி ஒரே ஸ்பாஞ்சை உபயோகித்தால் கெடுதல் ஏற்படும்.
அந்த ஸ்பாஞ்சை தொடுவதால் நாம் கைகளில் பாக்டீரியாக்கள் படிந்து வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும்.
இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பாஞ்ச் மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் பவுடர் கலந்த வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் அழிந்துவிடும்.
கழுவியப் பாத்திரங்களை, வெயிலில் காய வைத்து உடனுக்குடன் துடைத்து வைத்தால், தேவை இல்லாத துர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.
சமையலறை மேஜையை, எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு கலந்த நீரைக் கொண்டு தேய்த்தால் பளபளவென மாறும்.
கேஸ் அடுப்பில் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும்.
அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால், அடுப்பும், அடுப்பு வைத்துள்ள மேடையும் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் இருக்கும்.
இரண்டு லிட்டர் அளவுத் தண்ணீரில் அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடாவைக் கலந்து சமையல் அறைத் தரையைத் துடைத்து வந்தால் தரை சுத்தமாக இருக்கும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்