சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கரோனா தாக்கத்தால் தொழில் நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்து வருவதால், நாடு திரும்புவதற்குப் பதிவு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்கு தினசரி சராசரியாக 100 இந்தியர்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருக்கின்றனர். வேலையிழப்பு, மருத்துவ சிகிச்சை, குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானவர்கள் நாடு திரும்ப முடிவு செய்திருக்கின்றனர்.
வழக்கமான விமான சேவை தொடங்கப்படாத நிலையில், இந்தியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக "வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் விமானங்களை இயக்கவும் முடிவு செய்திருக்கிறோம். கடந்த மே மாதம் முதல் இதுவரை 120 சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர்.
அதேபோல, சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்தியாவில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய ரூபே அட்டைகள் மூலம் சிங்கப்பூரில் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்தல், எம்.எஸ்.எம்.இ., உற்பத்தித் துறையில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் புதிய தூதரக அலுவலக கட்டுமானப் பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.