மும்பையில் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு
மும்பை மாநகராட்சியில் மக்கள் கோரிக்கையின்படி கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
மும்பை மாநகராட்சியில் மக்கள் கோரிக்கையின்படி கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நாட்டில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனினும் 4-ஆம் கட்ட தளர்வுடன் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் தொழில்துறைகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மும்பையில் 30 சதவிகித ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மக்கள் வசதிக்காக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஊரடங்கு தளர்வில் மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 140 பேருந்துகள் இயக்கப்படும் என்று மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதிமுதல் மாவட்டங்களுக்கு இடையேயான சாலைப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 5,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 5.5 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் மொத்தமாக 18,000 பேருந்துகளும், ஒரு லட்சம் பணியாளர்களும் சாலைப்போக்குவரத்துத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய சாலைப் போக்குவரத்துத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.