முப்பையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 10 அல்லது அதற்கு மேற்பட்டோருக்குத் தொற்று பாதிக்கப்பட்டிருந்தால், முழு கட்டடத்தையும் சீல் வைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) சுகாதாரத் துறை திருத்தப்பட்ட நெறிமுறைகளை மறு ஆய்வு செய்து, குடிமைத் தலைவர் இக்பால் சிங் சாஹால் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
முன்னதாக, வீட்டில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டால், குறிப்பிட்ட வீடு மட்டும் சீல் வைக்கப்படும் என்றும் முழு கட்டடத்திற்குச் சீல் வைக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களில் 10-க்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று பதிவாகியிருந்தால் முழு கட்டடமும் சீல் வைக்கப்படும். மேலும் ஒரே வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று இருப்பின் அந்த வீடு மட்டும் சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
செவ்வாயன்று, மும்பையில் புதிதாக 1,585 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,73,534 ஆக உள்ளது. மேலும் 49 பேர் பலியானதைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 8,227 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று அதிகம் பரவி வருவதையடுத்து, நகரத்தில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இதுவரை 8,763 கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நகரத்தில் 592 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.