கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: ஒடிசா அரசு
கரோனா பாதித்து உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்: கரோனா பாதித்து உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் முதல், மருத்துவப் பணியாளர்கள் எவர் ஒருவரும், பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளாகப் போற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
தன்னலம் கருதாமல் கரோனாவுக்கு எதிரானப் போரில் முன்னின்றுப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு என சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.
Advertisement
மேலும், கரோனா பாதித்து உயிரிழக்கும் அனைத்து அரசு மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு அவர்கள் ஓய்வு பெறும் காலம் வரை முழு ஊதியம் வழங்கப்படும்.
நாட்டு மக்களும், கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு தங்களது ஆதரவையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும்.
அதே சமயம், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொதுமக்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.