தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்தது குறித்து...
வாழப்பாடி: தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்த சம்பவம், காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அய்யாவு கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (58). குடும்பத்துடன் வசித்து வந்த இவர், மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பணியில் இருந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை மீட்ட சக காவலர்கள் சிகிச்சைக்காக அயோத்தியாப்பட்டணம் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் உயிரிழந்தார். இவரது உடல் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவிற்கு, போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஹரிபிரசாத் என்ற மகனும், சங்கீதப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.