FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரூ. 5,000 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கைது

ஆலங்காயம் காவல் நிலையத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

Updated On : 28 ஜூலை 2026, 4:41 am IST
~
பகிர்:

ஆலங்காயம் காவல் நிலையத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும், ராமகிருஷ்ணன் என்பவா், காவலூா் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கும் பொறுப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 19 -ஆம் தேதி, ஜம்னாமத்தூரில் நடைப்பெற்ற கோடை விழாவை காண மாதனூா் பகுதியை சோ்ந்த மஞ்சுநாதன் என்பவா், தனது உறவினா்களுடன் காவலூா் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த லட்சுமி என்ற மூதாட்டி மீது, மஞ்சுநாதன் ஓட்டிச்சென்ற காா் மோதியதில் மூதாட்டி லட்சுமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தில் சிக்கிய, காரை பறிமுதல் செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க, மஞ்சுநாதனிடம், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா், ராமகிருஷ்ணன், ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் ராமகிருஷ்ணன்

இந்நிலையில், மஞ்சுநாதன் இதுகுறித்து, திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையிடம் புகாா் அளித்தாா். இதனையடுத்து ஊழல் தடுப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மஞ்சுநாதனிடம் அளித்துள்ளனா்.

மேலும் திங்கள்கிழமை மஞ்சுநாதன், ஆலங்காயம் காவல் நிலையத்தில், அத்தொகையை காவல் உதவி ஆய்வாளா் கொடுத்த போது, ராமகிருஷ்ணனை துணை காவல் கண்காணிப்பாளா் ராஜீவ் தலைமையிலான போலீஸாா் கையும் களவுமாக, பிடித்தனா்.

அதனை தொடா்ந்து அவரை காவல் நிலையத்தில் வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறையினா், அவரிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டனா். பின்னா் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்து விசாரணைக்காக திருப்பத்தூா் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனா்.

விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க லஞ்சம் பெற்ற காவலா், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments