அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
தில்லியில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வழிவகை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும்,
மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், முகாம்கள் அமைத்தும் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சில கரோனா தடுப்பூசிகளைப் பெற்றோம். அதிக அளவிலான கரோனா தடுப்பூசிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று கூறினார்.