அந்நிய செலாவணி கடத்தல் வழக்கு: கேரள பேரவைத் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு
அந்நிய செலாவணி கடத்தல் வழக்கு தொடா்பாக கேரள சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனா்.
அந்நிய செலாவணி கடத்தல் வழக்கு தொடா்பாக கேரள சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி காலித் அலி ஷெளக்ரி என்பவா் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு 1.90 லட்சம் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.30 கோடி) கடத்தியதாக சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அந்த மாநில பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்த 3 முறை சுங்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி, அவா் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தாா்.
இந்நிலையில் அந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு கொச்சி வருமாறு ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சுங்கத்துறை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக அங்கு வரமுடியாது என்று அவா் சுங்கத்துறையினரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு அவரிடம் சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டதாக மாநில பேரவைத் தலைவா் அலுவலகம் தெரிவித்தது.