மகாராஷ்டிரத்தில் விரைவில் முழு பொது முடக்கம்?
மகாராஷ்டிரத்தில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் கரோனா பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர், மாநிலத்தில் கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தனர்.
Advertisement
துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், "வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு நிதித் தொகுப்பு வழங்குவது பற்றி திட்டமிடப்பட்டு வருகிறது" என்றார். அமைச்சர் அசோக் சாவன் கூறுகையில், "பொது முடக்க முறை, நாள்கள் உள்ளிட்டவை பற்றிய முடிவுகள் விரைவில் இறுதி செய்யப்படும்" என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொது முடக்கம் பற்றி முடிவெடுக்கப்படவில்லை. எனினும், கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணத்திலேயே முதல்வர் இருந்தார். பொது முடக்கம் அவசியம் என பாஜக நினைக்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கான நிதித் தொகுப்புகள் பற்றி அரசு திட்டமிட வேண்டும்" என்றார்.