கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது: ஒரே நாளில் 3.60 லட்சம் பேர் பாதிப்பு
தேசிய அளவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 2 லட்சத்தைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை கூறியிருப்பதாவது:
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3,293 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 2,01,187 பேர் இறந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 29,78,709 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 16.55 சதவீதமாகும். அதேவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை பிப்ரவரி 17 இல் 97.33 சதவீதமாக இருந்த நிலையில் திங்கள்கிழமை 82.62 சதவீதமாகக் குறைந்தது. செவ்வாய்க்கிழமை மேலும் குறைந்து 82.54 சதவீதமானது. இத்தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உள்ளது.
நாட்டில் ஏப். 27 வரை 28.27 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 17,23,912 பேருக்கு பிரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் ஒரே நாளில் 3.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பில் 69.1 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். செவ்வாய்க்கிழமை 2.61 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நாட்டில் இதுவரை மொத்தம் 14.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டோர் என்ற முன்னுரிமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.