கோவாவில் இன்று முதல் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்
கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்துவரும் நிலையில், கோவாவில் இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்துவரும் நிலையில், கோவாவில் இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் மே 3-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்தனர். சாலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சாலைகளில் எந்தவிதமான போக்குவரத்தும் இயங்கவில்லை என்றும், குறிப்பாக நகர்ப்புறங்களில் கடுமையான ரோந்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவாவில் இதுவரை 88,028 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,146 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர். ஏப்ரல் 29 நிலவரப்படி, கடலோர மாநிலத்தில் 20,898 சிகிச்சையில் உள்ளனர்.
====