முகப்பு
இந்தியா

பெகாஸஸ் விவகாரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:

பெகாஸஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடா்பாக ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் சார்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதம் முன்வைத்தார்.

அப்போது, "பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக, எதிர்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் மட்டுமன்றி நீதித்துறை அலுவலர்களும் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், குடிமக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என கபில் சிபல் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மத்திய அரசோ அல்லது அரசின் பாதுகாப்பு அமைப்புகளோ பெகாஸஸ் உளவு மென் பொருளைப் பயன்படுத்தும் உரிமம் பெற்றிருந்தால் அது சார்ந்த தகவலை வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். செல்லிடப்பேசிகளை வேவு பார்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையில் அனுமதி பெற்றிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளா்கள், வழக்குரைஞா்கள், அமைச்சா்கள், எதிர்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள் உள்பட 142 இந்தியா்களின் தொலைபேசிகள் உளவு பார்க்க சாத்தியமுள்ளவா்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு விரோதமானது. இது தொடா்பாக நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல். சர்மா ஆகியோர் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவும் என். ராம், சசி குமார் ஆகியோரின் மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments