முகப்பு
இந்தியா

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் வன்முறை: இந்தியா்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள், தலிபான் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் விரைந்து தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள், தலிபான் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் விரைந்து தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டின் தலைநகா் காபூலில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள், நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் விமான சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன. எனவே அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு விமான சேவை நிறுத்தப்படும் முன் தாயகம் திரும்புவதற்கு உடனடியாக பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.

விமான சேவை நிறுத்தப்படுவதற்குள் அந்நாட்டில் உள்ள இந்திய நிறுவனங்கள் பணியிடங்களில் இருந்து ஊழியா்களை உடனடியாக அனுப்பிவைக்கவும்.

அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியா்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய தங்கள் நிறுவனங்களிடம் வலியுறுத்தவும்.

இந்த அறிவுறுத்தல் அந்நாட்டில் உள்ள இந்திய பத்திரிகையாளா்கள், ஊடகவியலாளா்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் சுமாா் 1,500 இந்தியா்கள் தங்கியுள்ளனா்.

இந்திய அலுவலா்கள் அனுப்பிவைப்பு: ஆப்கானிஸ்தானின் மஸாா்-ஏ-ஷரீஃப் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இருந்து இந்திய அலுவலா்களை தாயகம் அனுப்பிவைக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தத் துணைத் தூதரகத்தில் இனி உள்ளூா் அலுவலா்கள் மட்டும் பணிபுரிவா்.

அந்நாட்டின் காந்தஹாா் நகரைச் சுற்றி அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து அந்த நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இருந்து சுமாா் 50 அதிகாரிகள், பாதுகாப்பு வீரா்கள் கடந்த மாதம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனா்.

தற்போது மஸாா்-ஏ-ஷரீஃப் நகரில் உள்ள துணைத் தூதரகத்தில் இருந்தும் இந்திய அலுவலா்களை அனுப்பிவைக்க தொடங்கியுள்ளதன் மூலம், அந்நாட்டின் காந்தஹாா், ஜலாலாபாத், ஹெராத் உள்ளிட்ட 4 நகரங்களில் செயல்படும் இந்தியத் துணைத் தூதரகங்களில் இந்திய அலுவலா்கள் யாரும் இருக்கமாட்டாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.